சென்னையிலிருந்து மும்பைக்கு இண்டர்வியூக்கு வரும் ஆர்யா அதே விமானத்தில் ஆர்யாவின் தோழியான நயன்தாரா இருவரும் மும்பைக்கு வருகின்றனர் இவர்களுடன் சக பயணியாக அஜித்தும் அதே விமானத்தில் வருகிறார். வந்த இடத்தில் நயன்தாராவை சில மர்ம நபர்கள் கடத்த முயல அவர்களிடம் இருந்து நயன்தாராவை காப்பாற்ற முயல்கிறார். ஆனால் இவர்கள் இருவரையும் அந்த மர்ம கும்பல் கடத்தி விடுகிறது. கடத்தியது யார், எதற்காக என்று சிக்கும்போதே எண்ட்ரி ஆகிறார் அஜித். நயன்தாராவை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு ஆர்யாவிடம் பேரம் பேச, தன் தோழியை காப்பாற்ற வேண்டும் என்று, அஜித் சொல்லும் வேலையை முடித்து தர ஒப்புக்கொள்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும்
திருப்பங்களை மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ளார் விஷ்ணுவர்தன்.
நயன்தாரா அஜித்தின் கூட்டாளிதான் எனத் தெரிந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி போலிஸிடம் போக துடிக்கிறார் ஆர்யா. ஆனால் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார். இதன் மூலம் மும்பையின் முன்னணி டிவி தொலைக்காட்சியின் சாட்லைட் சிக்னலை கட் செய்கிறார் ஆர்யா. அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் நமக்கு இடைவெளிக்குப் பின் தான் தெளிவு கிடைக்கிறது.
அதிகார வர்க்கத்தில் மேலோங்கி இருக்கும் சிலர் பணத்துக்காக ஆசைப்பட்டு செய்யும் ஊழலால் தன் உயிர் நண்பனான ராணாவை இழக்கிறார். இதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டுபிடிக்கும் அவர். அந்த ஊழலே ஹோம் மினிஸ்டரால் தான் நடந்ததது எனத் தெரிந்ததும் கொஞ்சமும் பதப்படாமல் தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை…
படத்திற்கு பெரிய தூணாக நிற்பவர் அஜித்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக இல்லையென்றாலும் அவர் வரும் காட்சிகள் ஆக்சன் தான். சாஃப்ட்வேர் இன்ஜினியராக ஆர்யா துறு துறு நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை திறன்பட செய்திருக்கிறார் ராணா டகுபதி, படத்தில் காமெடி இல்லையென்றாலும் வில்லன் மகேஷ் மஞ்ஜுரேக்கர் கிளைமேக்சில் பேசும் வசனங்கள் நகைச்சுவக்கு உத்திரவாதம் பாஸ்…
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் “ஆரம்பமே” மற்றும் “என் ஃப்யூஸ் போச்சே” பாடல்கள் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. ஆனால் அதற்கு இணையாக பின்னணியில் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் பாடல் காட்சியானாலும் சரி, சண்டைக் காட்சியானாலும் சரி அதில் ஒரு பிரம்மாண்டத்தை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். மும்பையை அதன் இயல்பு மாறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு ஹாலிவுட் படம்போல ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக நகர்கிறது திரைக்கதை, அஜித்தின் பஞ்ச் டயலாக் “சாவுக்கு பயந்தவன் தான் ஒவ்வொரு நாளும் சாவான், பயப்படதாவன் ஒரு தடவைதான் சாவான்”…
இறுதியில் படத்தை இரண்டாம் பாகம் எடுக்கப்போவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள், ஒருவேளை அடுத்த பாகத்தையும் எடுக்க ரெடி ஆயிட்டாங்களோ…
ஆக இந்த தீபாவளி தீவிர அஜித் ரசிகர்களுக்கு செம விருந்துதான்